புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் காணிகளின் உறுதிகளில்லாத தமிழர்களின் வடக்கு மாகாணத்திலுள்ள காணிகளை ஆக்கிரமிக்கும் பாரிய திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை அரசு ஆக்கிரமிக்கப்போகின்றது. இதனை ஒருபோதும் அனும திக்க முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களுக்கும் அவசரகோரிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர்,
புலம்பெயர்நாட்டில் உள்ளவர்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம். உங்களுக்கு இங்கே காணி இருக்குமானால் தயவு செய்து இங்கு வந்து அல்லது சட்டபூர்வ அற்ரோனிக் தத்துவக்காரரை நியமித்து காணி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
அப்படிகாணியில் அக்கறை இல்லையென்றால் இங்கு காணி இல்லாத எமது மக்களுக்கு இனாமாக அதனை எழுதிக் கொடுங்கள்.
தயவு செய்து உங்களின் காணிகள் அரச காணிகளாக போவதை அனுமதிக்க வேண்டாம். இந்தியாவிலே தற்போது ஒரு இலட்சத்தைஅண்மித்த எமது மக்கள் இருக்கிறார்கள்.
சர்வதேச சட்டத்தில் அவர்கள் அகதி என்றே இருக்கின்றார்கள். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதியாக இருக்கின்ற போது அவர்களது நிலங்களை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.
மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டு தினங்களுக்குமுன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு வாபஸ் பெற காலக்கெடு மே 28 வரை வழங்குகின்றோம்.
அந்தத் திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசுவாபஸ் பெறாது விட்டால் ஏனையதமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மக்களை இணைத்துக்கொண்டு அந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப்போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்.
இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த முழுத் தமிழினமும் தமிழ்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப்போகின்றபோராட்டம்.
தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய ஒரு தேவை வந்துள்ளது. தமிழினத்தின்கருத்தை இந்தப்போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம்முன் வைப்போம் என்றார்
இதேநேரம் வடமராட்சிப் பிரதேசத்தில் மருதங்கேணியிலிருந்து வன்னியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரை 6000 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு அடையாளம் கண்டு இதுதொடர்பான வர்த்தமானியையும் தற்போதைய அரசாங்கத்தினர் வெளியிட்டுள்ளனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சிறியளவிலான காணிகளை மாத்திரம் விடுவித்துக் கொண்டு பெரியளவிலான காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.