உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
ரஷியா-உக்ரேன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இந்த போரில் உக்ரேனின் பல நகரங்களை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரேனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனிடையே அண்மை காலமாக உக்ரேன் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரேனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா.வில் நேற்று முன்தினம் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
'ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரேனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான தீர்மானத்தை உக்ரேன் முன்மொழிந்தது.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானத்தை வழிமொழிந்தன. அந்த தீர்மானத்தில் "உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்; சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரேன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து இராணுவப்படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷியா தனது இராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுசபை, உக்ரேனின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.ரஷியா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
இந்தியா, சீனா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் உள்பட 99 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.