சர்வதேச மாநாட்டில் ரஷ்யா - உக்ரைன் அதிகாரிகள் அடிதடி: வைரலாகும் காணொளி..!



உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது.

இதில் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உள்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தார்.

இதனை பார்த்த ரஷ்ய பிரதிநிதி உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.

பின் ரஷ்ய பிரதிநிதியை துரத்திச் சென்ற உக்ரைன் எம்பி அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக் கொண்டார்.

மேலும் ரஷ்ய பிரதிநிதி செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் எம்பி அவரது முகத்தில் கடுமையாக தாக்கினார்.

இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு தடுத்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.