போதைப் பொருளை கொடுத்து நண்பனின் உயிரை பறித்த இளைஞன்! யாழில் சம்பவம்


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்று (18) போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்தமையால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றவேளை போதைப்பொருளை குறித்த இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

அதனையடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இளைஞன் இருந்த இடத்திற்கு தாயார் சென்றவேளை, மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை காவல்துறையினர், இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த, மற்றைய இளைஞனை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, வைத்திய அறிக்கையில் குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் உயிரை மாய்த்துள்ளார்.

நேற்றைய தினம் (18)  போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு, வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு, வீட்டார் பணம் கொடுக்காததால், தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால் குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால் அவரது மனைவி மற்றும் பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.