பிரசவத்தின் போது இரட்டை சிசுக்களும் தாயும் உயிரிழப்பு : யாழ்ப்பாணத்தில் சம்பவம்


யாழ். போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட இரட்டை சிசுக்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சோமசுந்தரம் வீதி ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நிமலராஜ் சாருமதி  என்ற இளம் தாயாவார்.

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த கற்பவதியான தாய்க்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிசுக்கள் பிரசவிக்கப்பட்ட போது ஒரு சிசு இறந்தும் மற்றைய சிசு சில மணி நேரத்திலும் இறந்துள்ளது.

மயக்கமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (26) அதிகாலை  உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில், யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் கண்டறிய உடற்கூற்று பாகங்கள் இரசாயண பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.