தமிழர் ஒருவரை இந்தியாவின் பிரதமராக்க முயற்சி



இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 2024 ஆண்டு மே மாதமளவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி தீவிரம் காட்டி வருகின்றது.

தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் புதிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழர் ஒருவரை பிரதமாராக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று, கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ் நாட்டு பாரதிய ஜனதா கட்சியினருடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, தமிழ் நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே தமது விருப்பம் என கூறியுள்ளார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம் எனவும் இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட தி.மு.க.தான் காரணம் எனவும் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம் எனவும் அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.