ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
"ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார்.
இதை உடனடியாக செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும், . இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு முக்கிய தீர்மானமாகும். இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் ட்ரம்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.
நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என்றார்
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பில் இந்திய மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. நிலையான எரிபொருள் விலை மற்றும் பாதுகாப்பான விநியோகம் இரண்டும்தான் இந்தியாவின் எரிசக்திக் கொள்கை.
எங்கள் எரிசக்தி கொள்முதலை அமெரிக்காவுடனும் விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்த முயற்சி சீராக முன்னேறியுள்ளது. தற்போது அமெரிக்கா இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது” என கூறியுள்ளார்.