பதவியேற்கும் முன்பே அடுக்கடுக்காக மிரட்டும் ட்ரம்ப்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்(donald trump). அவர் பதவியேற்பதற்கு முன்னதாகவே வரிவிதிப்பு, எண்ணெய் விநியோகம் உள்ளிட்ட விடயங்களில் உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது '' பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'' என அவர் மிரட்டியுள்ளார்.

அட்லாண்டிக் கடலையும், பசுபிக் கடலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய். இதனை அமெரிக்கா கடந்த 1914 ல் வடிவமைத்தது. பிறகு, 1999 டிச.,31 அன்று பனாமா நாட்டிடம் ஒப்படைத்தது.

அமெரிக்காவின் தேசிய சொத்து

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் பனாமா கால்வாய், எங்கள் நாட்டின் தேசிய சொத்து. அமெரிக்காவின் வர்த்தகம், கடற்படை விரிவாக செல்வதற்கும், அமெரிக்க துறைமுகங்களுக்கு பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் இக்கால்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது.

இக்கால்வாயை அதிகம் பயன்படுத்தும் நாடு அமெரிக்கா. நவீன உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கால்வாய் 110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கர்களின் அதிகளவு பணம் செலவு செய்யப்பட்டது.

எவ்வித கேள்வியும் இன்றி எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும்

கட்டுமானத்தின் போது, வனப்பகுதியில் பலவித பிரச்சனைகள் காரணமாக 38 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இது மற்றவர்களின் பலன்களுக்காக வழங்கப்படவில்லை. மாறாக அமெரிக்கா - பனாமா இடையே ஒத்துழைப்புக்கான அடையாளமாக வழங்கப்பட்டது.

அமெரிக்க கப்பல்கள், கடற்படைக்கு பனாமா வசூலிக்கும் வரி அதிகமானது. இதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அக்கால்வாயை திரும்ப கேட்போம். எவ்வித கேள்வியும் இன்றி எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.