காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு


போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள சம்பம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டரம்ப் இந்த திட்டத்தை மேலதிக விபரங்களை வழங்காமல் அறிவித்துள்ளார்.


காசாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக மீள்குடியேற்ற ட்ரம்ப் முன்வைத்த அதிர்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ட்ரம்ப்,

அமெரிக்கா காசா பகுதியை கையகப்படுத்தும், நாங்கள் அதையும் செய்வோம். நாங்கள் அதை சொந்தமாக வைத்திருப்போம்.

மேலும், தளத்தில் உள்ள ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பாவோம்.

தேவையானால், நாங்கள் அதைச் செய்வோம், நாங்கள் அந்தப் பகுதியைக் கையகப்படுத்தப் போகிறோம், நாங்கள் அதை மேம்படுத்தப் போகிறோம், ஆயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போகிறோம்.

மேலும், இது முழு மத்திய கிழக்கு நாடுகளும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.

நான் ஒரு நீண்ட கால உரிமை நிலையைப் பார்க்கிறேன், அது மத்திய கிழக்கின் அந்தப் பகுதிக்கு பெரும் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதை நான் காண்கிறேன்.

இது குறித்து நான் பிராந்தியத் தலைவர்களுடன் பேசியுள்ளேன், அவர்கள் இந்த யோசனைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதன்போது, காசாவில் யார் வசிப்பார்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, அது “உலக மக்களின்” வீடாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க உரிமையின் கீழ் மத்திய கிழக்கின் ரிவியரா ஆகலாம் என அவர் தெரிவித்தார்.

எனினும், கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவை எப்படி, எந்த அதிகாரத்தின் கீழ் அமெரிக்கா கைப்பற்றி ஆக்கிரமிக்க முடியும் என்ற கேள்விக்கு ட்ரம்ப் நேரடியாக பதிலளிக்கவில்லை