திருகோணமலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு..!


திருகோணமலை - மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்து பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் வருகை தந்துள்ள நிலையில் முற்சக்கர வண்டியை விட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் மொரவெவ - நாமல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரதேச சபை உறுப்பினரொருவரே காயமடைந்துள்ளார்.

அரசியல் கூட்டம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கின்ற வேளையில் முச்சக்கர வண்டியில் வருகைதந்த சந்தேகநபர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான குறித்த பிரதேச உறுப்பினர் “1990 சுவசெரிய அம்பியூலன்ஸ்” மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் குறித்து மொரவெவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.