வசந்த முதலிகேவின் வழக்கு விசாரணை - நீதவான் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு


பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பான விசாரணையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே குறித்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவானால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முதலிகே நேற்று விடுவிக்கப்பட்டார்.

இந்தத் தீர்ப்பை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான், (TID) பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றம் சுமத்தப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முதலிகேவை விடுவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் முதலிகே செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 140 நாட்களுக்கும் மேலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.