பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சியாக, கராச்சியில் உள்ள சிறை கதவுகள் உடைக்கப்பட்டதாகவும், சுவர்கள் உடைக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியிருக்கலாம் என்றும், தப்பிய கைதிகள் அனைவரும் அபாயகரமானவர்கள் என்றும் கூறப்படுவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மலிர் என்ற சிறையில் நேற்று நள்ளிரவில் மிகப்பெரிய கலவரம் நடந்ததாகவும், இந்த கலவரத்தில் முக்கிய சுவர் உடைக்கப்பட்டதால் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிறை அதிகாரிகளின் தகவலின்பிரகாரம், 50 முதல் 200 கைதிகள் வரை தப்பியிருக்கலாம் என்றும், இதில் பல ஆபத்தான குற்றவாளிகள் இருப்பதாகவும், தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கராச்சி சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல் இல்லை என்றும், பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.