டிக்கெட் முன்பதிவு-சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் 2!

செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் நீண்டநாள் கனவான பொன்னியின் செல்வன் மணிரத்னத்தின் முயற்சியால் நனவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவே படத்தின் பிரமாண்டத்தை ரசிகர்களுக்கு வெளிக்காட்டியது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. இத்திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் ட்ரெண்டிங்கில் பலரது பிளேலிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. பெரும்பாலான திரையரங்குகளில் 2 வாரங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போதே நிறைவுபெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் அதிகளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் 700 முதல் 750 வரையிலான திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் காலை 4.30 மணிக்கு திரையிடப்பட உள்ளன. பொன்னியின் செல்வன் திரைப்பட டிக்கெட் முன்பதிவு, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரித்துள்ளது.