தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி

ஆராய்சிக்காக நிலத்தை தோண்டிய வேளை ஆயிரக்கணக்கான எலும்புகூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொல்பொருள் ஆராய்சியாளர்கள், தங்களின் ஆராய்ச்சிக்காக மேற்கு ஜெர்மனியில் நியூரம்பெர்க் என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வுக்காக நான்கு குழிகளைத்தோண்ட திட்டமிட்டனர். இவ்வாறு அவர்கள் குழிகளை தோண்டியவேளை ஆயிரக்கணக்கான இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புகூடுகள் அனைத்தும் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இறந்தவர்கள் 15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு குழியிலும் நூற்றுக்கணக்கான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கணக்கிட்டப்படி, “ 3 குழிகள் முழுமையாக தோண்டிய நிலையில் மீதம் ஒரு குழி தோண்டவேண்டியுள்ளது” என்று தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிறுவனமான இன் டெர்ரா வெரிட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இது போன்ற ஒரு நிகழ்வு இது வரையில் நடந்ததில்லை; இது குறித்து அனைத்து தகவல்களையும் பெறுவதற்கான நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என்று நகரின் பாரம்பரியப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மெலனி லாங்பீன் கூறினார்.

இடப்பற்றாக்குறை காரணத்தால் இறந்தவர்களின் உடல்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அமர்ந்த நிலையிலும், இவர்களுக்கு இடையில் குழந்தைகளின் உடல்கள் அடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

ஒவ்வொரு குழிகளிலும் சுமார் 300 இற்கு மேல் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும், கூறுகின்றனர். இந்த எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர்.