தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் - தவறவிட வேண்டாம்..! பிரதமர் வலியுறுத்து

"தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது" என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

'தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும் ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்' என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.

"புதிய அரசமைப்பு, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிபர் திறந்த மனதுடன் அனைவருடனும் பேச ஆரம்பித்துள்ளார்.

எனவே, தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அதிபருடன் இணைந்து செயற்பட வேண்டும்.

காலத்தை இழுத்தடிக்காமல் புதிய அரசமைப்பு மூலம் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதுதான் அதிபரின் விருப்பம்.

அதனால்தான் ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான பணிகள் நிறைவுபெற வேண்டும் என்ற கால வரையறையை அதிபர் விதித்துள்ளார்" என்றார்.