தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.

தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாண காவல்துறையினரால் செப்டம்பர் 19 ம் திகதி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

செப்டம்பர் 20ம் திகதி இந்த மனுவினைத் தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், காவல் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று (21) கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியில் வந்து, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இதில், தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் அனுஷ்டிப்பு வன்முறை வடிவம் பெற்று வருவதனால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு சான்று பயக்கும் வகையில், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து காணொளி எடுத்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காணொளி எடுக்கப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்டது என்று சம்பவம் தொடர்பான காணொளியினையும் நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனர்.

தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் அனுஷ்ப்பு இவ்வாறு வன்முறை வடிவமெடுத்து வருவதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்காக எதற்கு நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், காவல்துறையினர் உரிய நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும், வன்முறை பரவுவதை தடுப்பதற்காக நினைவு நாள் அனுஷ்டிப்பை தடை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனு தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் இன்று (22) மதியம் 1.30 மணியளவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என கட்டளை பிறப்பித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.