எவ்வளவோ சொத்து இருந்தும் என்ன நிம்மதி இல்லை -சூப்பர் ஸ்டார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் 3 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடந்த பொது விழாவில் கலந்து கொண்டார். பரமஹம்சயோகானந்தர் எழுதிய கிரியா யோகா பற்றிய பயிற்சி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- என்னை பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள் இது பாராட்டா, திட்டா என எனக்கு தெரியவில்லை. அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனசு அறிவுடைய தயாரிப்புதான். அதுவே மூலாதாரம். மனசு, அறிவு, சக்தி இவை செயல்பட ஒரு சக்தி வேண்டும் அதுதான் உயிர். அதை ஆத்மா, ஜீவாத்மா என்கின்றனர்.

மனிதனுக்கு மனசு எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்காது, ஒண்ணு கடந்த காலத்தில் இருக்கும். அப்படியும் நல்ல நினைவுகளாக இருக்காது. யார் நமக்கு கெடுதல் பண்ணினா? யார் நமக்கு ஆப்பு வெச்சா? என்று யோசிக்கும். அல்லது எதிர்காலத்தில் இருக்கும் நாம் அவனைப்போல் ஆகிவிடுவோமோ? அவன் போல் நமக்கு நோய் வந்து விடுமோ? என்று யோசித்துக் கவலைப்படும். நிகழ்காலத்திலேயே இருக்காது.

இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதைவிட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக நாம் இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே ஆரோக்கியமாக நடமாடி கொண்டிருக்கும்போது போய் சேர்ந்துவிட வேண்டும். நான்கூட இரண்டு முறை மருத்துவமனை போயிட்டு வந்தவன்தான்.

நான் யார் எங்கிருந்து வந்தவன், சாதி என எல்லாம் சேர்ந்ததுதான் அறிவு, பணம், புகழ், பெயர் உச்சி. பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம் நிம்மதி என்பது 10 சதவீதம்கூட இல்லை. எல்லாம் மாயை. மாயை என்பது என்ன? எது இல்லாததோ அது இல்லாமல் வந்து மறைந்து விடும். அது போல்தான் பெயர், புகழ் எல்லாமும். இந்த உடம்பு எப்படியிருந்தது?

குழந்தை, மனிதன் வயதாவனவன். பிறகு டெட்பாடி என்று மாறிவிட்டது. ஆனால் இங்கிருக்கும் சன்னியாசிகளைப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுடன் பாபாஜி, ரிஷிகள், ஜீசஸ் என்று எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நிம்மதி என்பது தற்காலிகமானது. இது ஆயிரம் அம்பானி, ஆயிரம் அதானி இருப்பது போல. எல்லோரும் கிரியா பயிற்சி செய்யுங்கள். எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது கிரியாதான். படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிரியா பயிற்சி செய்வேன். இதை நீங்களும் பழக வேண்டும். சுவாமிஜி இதனை தமிழில் தந்துள்ளார்கள். இதனை பயின்று ஆரோக்கியமாக வாழுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.