இந்த ஆண்டின் இறுதிக்குள் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என்கிறார் தென்னக்கோன்

இந்த ஆண்டின் இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்த அவர்,

கடந்த மார்கழி மாதம்  17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயற்பாட்டின் மூலம், இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என 138,116 பேரும்,

பட்டியலிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 965 உறுப்பினர்களுள் 703 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

பொலிஸ், பொலிஸ் விசேடஅதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்.

அதற்காக, இலங்கைப் பொலிஸார் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சிலரைத் தவிர இந்நாட்டின் பெரும்பாலான பொதுமக்கள்  இலங்கை பொலிஸார் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.