கனடா செல்லவிருந்த இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை என உறுதி

வெளிநாடு செலவிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

கனடா செல்வதற்கு தயாராக இருந்த குறித்த இளைஞன், சுமார் 20 இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்திலிருந்து திங்கட்கிழமை (29) இரவு பாண்டியன் குளம் சென்றிருந்தார்.

எனினும், அவரை காணவில்லை. உறவினர்கள் அவரை தேடிய நிலையில் வவுனிக்குளம் குளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். ஏச் .மக்ரூன்ஸ், சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்.