ரணிலுக்கும், மனைவிக்கும் அனுப்பப்பட்ட அழைப்பிதழை வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி : ரணிலை மீட்க தீவிர நடவடிக்கை


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால், வழங்கப்பட்ட அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ரணில் விக்ரமசிங்க அரச நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தவில்லை என்றும் முன்னரை போன்றே குற்றச்சாட்டுகளை மீண்டும் மறுத்துள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது.

அதற்கமைய, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அன்று வால்வர்ஹாம்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுடன் இடம்பெற்ற மதிய உணவு விருந்தில் அவர்கள் பங்கேற்றது குறித்தும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போது, வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்றது என்ற வரையறை இல்லை என ரணில் விக்கிரமசிங்க நேற்று நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருப்பது தொடர்பில் கட்சி தீவிரமாக ஆராயும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

 மேலும், அவருக்கு எதிரான வழக்கினை எதிர்த்து கட்சி போராடும் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.