நெடுந்தீவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் : பொலிஸார் மீதும் தாக்குதல்



யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில் , ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்துள்ளனர்.
 

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு இளைஞர்கள் குழு ஒன்று மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது , வீதியில் செல்வோரை வாள்களை வீசி அச்சுறுத்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ள வன்முறை கும்பல், அங்குள்ள விருந்தினர் விடுதிக்குள் சென்று , அங்கு மது விருந்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 


அதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார்  சம்பவ இடத்திற்கு விரைந்த போது , குறித்த வன்முறை குழு பொலிஸார் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
 

அதன் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளதுடன் , தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.