யாழில் கடந்த 16 மாதங்களாக தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது..!


யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இருந்த கலையகம் ஒன்றினுள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று ,

அங்கிருந்த 06 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு, அங்கிருந்த வாகனம் மற்றும் கலையகத்திற்கும் தீ வைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் ,

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடையவர் எனவும் , கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.