மரணத்திற்கு ஆசிரியர்களே காரணமென தெரிவித்து விபரீத முடிவெடுத்த மாணவன்

தனது மரணத்திற்கு பாடசாலை ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம் என வீடியோ வெளியிட்டு 9ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை பாடியைச் சேர்ந்த சேகர் என்பவரது 14 வயது மகன் பாரதி செல்வா. இவர் தனியார் பாடசாலை ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், தனது பெற்றோர் வேலைக்கு சென்ற சமயம் பார்த்து பாரதி செல்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது சகோதரர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்த பாரதி செல்வா, தனது மரணத்திற்கு காரணம் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தான் எனவும், பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அதில் பேசியிருக்கிறார்.

மாணவரின் தந்தை சேகர் கூறுகையில், 'என் மகனுக்கு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளனர். வீட்டுப்பாடம் செய்யாததால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் திட்டி, அடித்துள்ளார்கள். என் மகனின் தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும், இதுவரை ஒருவர் கூட எங்களிடம் எதுவும் கேட்கவில்லை.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.