அதள பாதாளத்தில் நாடு - புலம்பெயர் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் விடுத்துள்ள அழைப்பு!


புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுகிறோம் என சிறிலங்கா அதிபர் செயலக பணிக்குழாமின் தலைவரும் அதிபரின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதாவது கொரோனா நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோல பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அதேபோல பொருட்களைக் கொள்வனவும் செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. 

இந்த நிலைமை வடக்கு, கிழக்கு, தெற்கு மட்டுமல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.  அந்த நேரத்தில் தான் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக பதவியினை பொறுப்பேற்றிருந்தார். 

அந்த நேரத்தில் டொலர் பிரச்சனை, பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி இல்லை, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்திருந்தது, தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியில்லை மற்றும் மருந்து பொருட்கள் வாங்க நிதியில்லை போன்ற பல்வேறு பிரச்சனை அந்த நேரத்தில் காணப்பட்டன. 

இதன் காரணமாக மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால், ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

எமது நாட்டைப் போல வேறு பல நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நிதியினை பெற முடியாத நிலையில் உள்ளார்கள்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு தற்பொழுது நாடு படிப்படியாக முன்னோக்கிச் செல்கின்றது. நாங்கள் முன்னோக்கி நகர்கின்றோம்.

இனி ஒரு அடி ஏனும் பின்னோக்கி செல்ல மாட்டோம் என்ற அடிப்படையில் தற்போது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் திட்டத்தில் அதிபர் ஈடுபட்டுள்ளார்.  இந்த வேலை திட்டத்தில் முழு இலங்கையும் உள்ளடங்கப்பட்டுள்ளது. 

வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்றியதோடு, காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்து வர்த்தகத்தை ஏற்படுத்தி வடபகுதியில் சுபீட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம். 

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்.  அதேபோல சமுர்த்தி கிடைக்காத குடும்பங்களும் தமக்கு சமுர்த்தி கிடைக்காமை தொடர்பில் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

அதாவது விண்ணப்பப் படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து உரிய அலுவலருக்கு அனுப்புவதன் மூலம் உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்பினை அனைவரும் ஒன்றிணைந்து விடுக்கின்றோம். இங்கே முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு நாம் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகம் ஊடாக ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் தலா 10 கிலோ அரிசி வீதம் ஒவ்வொரு வறிய குடும்பங்களுக்கும் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வறிய மக்களுக்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமானவிடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.