தமிழர்களை ஏமாற்றும் சிறிலங்கா இராணுவம்..! தாரைவார்க்கப்படுகிறதா மற்றுமொரு பகுதி



முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரி ஒட்டுசுட்டான் நகர மையப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் 25 ஏக்கர் காணி மற்றும் இரண்டு தனிநபர் காணி மற்றும் இந்து மயானம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 64 ஆவது படைப்பிரிவு முகாமிற்காண காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், மக்களின் காணி, இந்து மயானம் என்பன விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது அது இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் மீதி அபகரிக்கப்பட்ட 25 ஏக்கர் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் தமது கருத்துக்களை இதுவரை வழங்கவில்லை அவர்களுடைய கருத்துக்கு பின்பே இது தொடர்பாக முடிவு வழங்கலாம் என்று பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

இருப்பினும் பல காலமாக மயானம் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படும் நிலையில் குறித்த பகுதி மக்கள் மயானத்துக்கு பல மயில்கள் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும், காணியை விடுவிக்கிறோம் என ஏமாற்றி வருவதாகவும் அதனை விரைவில் விடுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.