வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்..! ஒரே நாளில் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட பயங்கர ஏவுகணைகள்


ரஷ்யா நடத்திய 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக தொடரும் உக்ரைன் ரஷ்யப்போர் தாக்குதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

திங்கள் கிழமையான நேற்று உக்ரைனிய பகுதிகள் மீது ரஷ்யா 18க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால் ரஷ்ய படைகளால் ஏவப்பட்ட இந்த 18 ஏவுகணைகளில் 15-ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி வழங்கிய தகவலில், திங்கட்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் ரஷ்ய படையெடுப்பாளர்கள் முலோபாய விமானங்களில் இருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினர் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது ரஷ்யா செலுத்திய அனைத்து ஏவுகணைகளும் அழிக்கப்பட்டதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மூன்று நாட்களில் நகரத்தின் மீதான இரண்டாவது தாக்குதல் என்றும், ஆனால் இவற்றில் பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் குடியிருப்பு வசதிகள் அல்லது உள்கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை என்றும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.