தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு

வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக குறித்த தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டியா? என்ற கேள்விக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ர்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது மும்முனைப்போட்டி இடம் பெற உள்ள ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் இது தொடர்பாக  வினாவிய போது அவ்வாறு ஒரு நிலை இருந்ததாகவும் போட்டிக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ளதால் கையொப்பம் இடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்த நிலையில் இன்று தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகின்ற எழுத்து மூல ஆவணங்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் போட்டியிடுகின்றார் என்ற விவரத்தை ஊடகவியலாளர்களிடம் மறைப்பதற்கான காரணம் என்ன? என கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றது.