ஓ.எம்.பி அலுவலகத்தின் கோரிக்கைகளுக்கு ஒத்துப்போக மாட்டோம்: உதயச்சந்திரா பகிரங்கம்

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளத் தயார் இல்லை. என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். 

மன்னாரில் இன்று (13.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள் (ஓ.எம்.பி) மரணச் சான்றிதழ் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு கதைத்துப் பார்த்தனர்.

ஆனால் அந்த விடயம் சரிவரவில்லை. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அம்மாக்களையும் அழைத்துப் பேசி பார்த்தனர். அதுவும் சரி வரவில்லை. ஆனால் தற்போது அரச திணைக்களங்களை அழைத்துப் பேசுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் மற்றும் நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஒருபோதும் இடம் பெறாது.

குறித்த மரண சான்றிதழ் மற்றும் நட்டஈடு எங்களுக்குத் தேவை இல்லை என்பதை ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எங்களுடன் கதைத்துப் பார்த்தார்கள் சரி வரவில்லை. தற்போது திணைக்களங்களை அழைத்துப் பேசி பார்க்கின்றார்கள். அதுவும் சரி வராது. நாங்கள் ஒரு போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போக மாட்டோம்.

நாங்கள் நீதியையே கேட்டு நிற்கின்றோம். எமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது?, நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை.

அவ்வாறு காசுக்காகப் போராடும் அம்மாக்களும் நாங்கள் இல்லை. ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் சகல விதத்திலும் எங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்கள். பயனளிக்கவில்லை. இந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக எங்களிடம் பேச முற்படுகின்றனர்.

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளத் தயார் இல்லை. 

அரச திணைக்களத்தை வைத்துக் கதைக்கும் ஓ.எம்.பி அலுவலகத்தினர் மீண்டும் எங்களுடன் கதையுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.