இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் 10 பேர் மீது ஆபத்தான முறையில் படகை செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து  அவர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து , படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய  ஒருவரே இதன்போது  உயிரிழந்திருந்தார்.

அதனை அடுத்து மீன்பிடி படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் , அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதுடன்  உயிரிழந்த மாலுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனையில், மாலுமியின் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்குதலுக்கு உள்ளானமையால்  மரணம் சம்பவத்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேவேளை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்ததை அடுத்து, அவர்களை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்திய பொலிஸார்  சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையுடன் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்போது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து 10 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30க்கும் மேற்பட்ட  தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாக 


ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும்  உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள்  ஒலிபெருக்கி  மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த சனிக்கிழமை  மீன் பிடிக்க சென்ற 22  ராமேஸ்வரம் மீனவர்களை கடற்படை கைது செய்ததை கண்டித்து குறித்த பிராந்திய மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து இன்று வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து  கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக 

இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை  தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.