அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு : 120 பேர் பலி, 170 பேர் மாயம்




அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கடும் மழை பெய்தது. இதில் கடந்த ஜூலை 4-ம் திகதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது.

இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 30 அடி வரை உயர்ந்தது.

இதனால் ஹில் கன்ட்ரி பகுதியில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கெர் கவுன்டியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த கிறிஸ்தவ மாணவிகள் முகாம் இந்த வெள்ளத்தில் கடுமையாக மூழ்கியது. இதில் பலர் உயிரிழந்தனர்.

மீட்புப் பணியின்போது கெர் கவுன்டியில் உள்ள இந்த முகாமில் இருந்து 28 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், கெர் கவுன்டியில் இதுவரை 95 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 40 குழந்தைகளும் அடங்குவர்.


இந்த வெள்ளத்தால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டிராவிஸ், பர்னெட், கெண்டல், டொம் கிரீன் மற்றும் வில்லியம்சன் பகுடிகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, டெக்ஸாஸ் மாகாணத்தில் உயிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

170-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்தார்.
இதனால் இறப்பு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரக்கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறன.

இந்தப் பணியில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை மீட்புப் படைகள் பயன்படுத்தி வருகின்றன.