உருவாகின்றது தேசிய அரசு; பிரதமராகின்றார் ரணில்! – சிங்கள நாளிதழ் பரபரப்புச் செய்தி

பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பைப் பெறும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலும் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


---

தேசிய அரசில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கக் கோரினால் பரிசீலனை செய்யத் தயார்! – ஐ.தே.க. தலைவர் ரணில் அறிவிப்பு

 

தேசிய அரசு தொடர்பாகவோ, அதில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்பது தொடர்பிலோ அரச தரப்பில் இருந்து நேரடியாக என்னுடன் யாரும் எதுவும் பேசவில்லை. அவ்வாறான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டால் பரிசீலித்து முடிவெடுப்பேன். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதையும் செய்யத் தயாராகவுள்ளேன் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்ட பின்னர், மக்கள் மத்தியில் ஓர் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கக் கூடியவராக தங்களைக் கருதுகின்றார்கள். இவ்வாறான சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், தங்களைத் தேசிய அரசின் பிரதமராக நியமிக்க முயன்று வருகின்றார் எனவும், அதற்கு முன்னோடியாகவே அன்றைய கூட்டத்தில் தங்களிடம் மன்னிப்புக் கோரினார் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா? அவ்வாறான பொறுப்பு உங்களிடம் முன்வைக்கப்பட்டால் நீங்கள் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கொழும்புச் செய்தியாளர் ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவர்,

நாட்டினதும் மக்களினதும் நலன் கருதியே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றேன். இந்த மாநாட்டைக் கூட்டச் சொல்லி பல மாதங்களுக்கு முன்னரே அரசிடம் கோரியிருந்தேன்.

காலம் தாழ்த்தியாவது மாநாட்டைக் கூட்டிப் பிரச்சினைகளை ஆராய்ந்திருக்கின்றார்கள். எனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளேன். அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தேசிய அரசு தொடர்பாக அரச தரப்பில் இருந்து நேரடியாக என்னுடன் யாரும் எதுவும் பேசவில்லை. அப்படியான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டால் பரிசீலித்து முடிவெடுப்பேன்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதையும் செய்யத் தயாராகவுள்ளேன் – என்றார்.

----


ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை! – ஆளும் தரப்பு

 

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்சவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சி.

தற்போதுகூட மக்களை திரட்டும் சக்தி தங்களிடம் உள்ளது. பஷில் ராஜபக்ஷ சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். அது நடக்காது. 2015 இல் ராஜபக்சேக்களை வீழ்த்த பார்த்தனர். அதுவும் முடியாமல் போனது. நிச்சயம் நாம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவோம்.

அத்துடன், முன்னாள் அமைச்சர்களான விமல், கம்மன்பில போன்றவர்களே அரசாங்கத்தினை பயணத்தை குழப்பினர் எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளனர்.