இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடி சூடிக்கொண்டார். அவரது மனைவி கமிலாவும் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து ராணியானார்.
கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
மன்னர் மூன்றாம் சார்லஸான இவர் அரச பணிகளை கவனித்து வந்த போதும் அவருக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக முடி சூடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மே 6ஆம் திகதி மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இறுதியாக கடந்த 1953 ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் பின்னர் தற்போது அரச குடும்பத்தில் மீண்டும் முடிசூட்டு விழா நடைபெற்றுள்ளது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.
முடி சூட்டு விழாவை முன்னிட்டு மன்னர் சார்லஸும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காங் அரண்மனையில் இருந்து வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
மன்னரையும் ராணியையும் காண வழி நெடுகிலும் இருபுறமும் மக்கள் திரண்டிருந்தனர்.
மக்களை பார்த்து இருவரும் கையசைத்தப்படியே வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்திற்கு வந்தனர். அங்கு பைப்பிள் மீது உறுதி அளித்த சார்லஸ் பைபிளுக்கு முத்தம் கொடுத்தார்.
பின்னர் அரச பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்ட சார்லஸ் அரச முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சார்லஸுக்கு 'சூப்பர் டூனிக்கா' எனும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.
பின்னர் இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டார் சார்லஸ்.
பின்னர் மன்னர் குடும்பத்தின் வீர வாள் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செங்கோல் கொடுக்கப்பட்டு புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லஸுக்கு சூடப்பட்டது. முறைப்படி மன்னரானார் மூன்றாம் சார்லஸ்.