ஏர் இந்தியா விமான விபத்து போன்று நேற்று காலை வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.
இதில் பயணிகள் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், விஷ்வாஸ் குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைக்க, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகளை சேர்ந்தோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், குஜராத்தின் Mid Day என்ற நாளிதழில் நேற்று காலை வெளியான விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
kidzania என்ற நிறுவனம் ஜூன் 13,14,15 ஆம் திகதிகளில் தந்தையர் தினம் தொடர்பாக நடத்தும் நிகழ்வு ஒன்றிற்கு வெளியிட்ட விளம்பரத்தில், Air India விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் சிக்கியிருப்பது போன்று விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் வெளியான சில மணி நேரங்களில், அதில் உள்ளது போன்று, ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து சிக்கியது.
விளம்பரமும், அதற்கு பின்னர் சில மணி நேரங்களில் நிகழ்ந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஒன்றாக உள்ளதால், இது தற்செயலான விடயமா? என சமூக வலைதள பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தந்தையர் தினம் தொடர்பான விளம்பரத்தில், ஏன் விமானம் ஒரு கட்டிடத்தில் சிக்கியிருப்பது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட வேண்டும். அந்த விமானத்தில் ஏன் ஏர் இந்தியா பெயரை குறிப்பிட வேண்டும் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
kidzania கடந்த வருடம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்செயலான விளம்பரம் என kidzania விளக்கமளித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள kidzania வில், ஏர் இந்தியா ஏவியேஷன் அகாடமி தொடர்பான வீடியோ ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. kidzania கட்டிடத்தில், ஏர் இந்தியா விமானம் இருப்பது இந்த வீடியோவில் உள்ளது.
விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விளம்பரம் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.