உக்ரைனுக்கு 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் உறுதி!

உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) தலைநகர் கீவ் சென்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரிஷி சுனக் தலைநகர் கீவ்வுக்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பிறகு வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி, ‘பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறது. ரஷ்யாவின் தாக்குதல் தோல்வி அடையும்’ என கூறினார்.

ஆம்புலன்ஸ்கள், ஆறு கவச வாகனங்கள் உட்பட மேலும் 11 அவசரகால வாகனங்கள் அவசரகாலப் தொகுப்பின் ஒரு பகுதியாக பிரித்தானியா, உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.போரின் தொடக்கத்தில் இருந்து அழிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தங்குமிடங்கள் போன்ற உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக இது 3 மில்லியன் பவுண்டுகள் நிதியை உள்ளடக்கும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு உதவவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.