மர்ம நபர் அழைத்துச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு : வெளியாகிய சிசிடிவி காட்சியால் அம்பாறையில் பரபரப்பு..!


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்  உயிரிழந்த நிலையில் நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் போயிருந்த குறித்த சிறுவனை  பொதுமக்களுடன்  இணைந்து  பொலிஸாரும் தேடிய நிலையில்  அச்சிறுவனின்  வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா  என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் குறித்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.

எனினும் சிறுவனை அழைத்து செல்வது யார் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது.

அதேவேளை குறித்த குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலையும் காணப்படுகின்றது.

இது தவிர  மரணம் அடைந்த சிறுவனின் சடலம்  தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்