அம்பாறையில் பதற்றம் - காவல்துறை துப்பாக்கிச்சூடு; காவலரண் எரிப்பு!

 அம்பாறையில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாட்டில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

காவல்துறை வீதித்தடையில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காவல்துறை காவலரண் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் காவல்துறை அப்பகுதி வழியாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகி சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் போது சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர்  துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற அக்கரைப்பற்று காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் உட்பட் 10 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.