பிரான்ஸில் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டம்!

பிரான்ஸில் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம் ஜனவரி 27ம் திகதி மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னோட்டமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மாணவர்களை பாடாலையில் வைத்திருக்கும் வகையிலான தெளிவான விதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாக ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஒமிக்ரோன் பரவல் காரணமாக பாடசாலைகளின் வகுப்புகளை நடத்துவதற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாகவும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள், மருந்தகங்களுக்கு வெளியே பரிசோதனைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் எனவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். பாடசாலைகள் இடையூறு இன்றி நடப்பதற்கு ஏதுவாக, பாடசாலை ஊழியர்களுக்கு 5 மில்லியன் உயர்தர முக கவசங்களை வழங்குவதாகவும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்து, தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக 3,000க்கும் மேற்பட்ட மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாகவும் அரசாங்கம் உறுதி அளித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சங்கங்கள், ஜனவரி 27ஆம் திகதி மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதனிடையே, கொரோனா வேகமாக பரவி வருவதால், பணிக்கு வர முடியாத ஆசிரியர்களுக்கு பதிலாக போதுமான மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.