ஜூலை கலவரம் - வடகிழக்குதான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்: அருட்தந்தை க.ஜெகதாஸ்

வடகிழக்குதான் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக ஜூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த ஜூலை கலவரத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஊறணியில் உள்ள அமெரிக்க மிஷனில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜெகதாஸ்,

"திருநெல்வேலி,தபால்பெட்டி சந்தியில் நடாத்தப்பட்ட இராணுவத்திற்கு எதிரான கண்ணிவெடி தாக்குதலுடன் ஜூலை கலவரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஆனால் இந்த ஜூலை கலவரம் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு கண்ணிவெடி தாக்குதல்தான் காரணம் அல்ல. அரசினால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஜூலை கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் இராணுவமும் படுகொலைசெய்யப்பட்டதாக தெற்கில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் பொரளையில் இராணுவத்தின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதன் பின்னர், 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி,தங்கத்துரை,ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களின் அனுசரணையுடனும் சக அரசியல் கைதிகள் தாக்குதல் மேற்கொண்டு படுகொலைசெய்தனர்." என தெரிவித்திருந்தார்.