கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன் தினம் (18.01.2023) வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சி சார்பில் சுயேட்சையாக களமிறங்கிய குழு

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உபட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசசபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றிணைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப்பங்கீடு விடயத்தில் கட்சிக்காக கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை புறம்தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்காமல் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டமையால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் தனிவழியே தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்து மிகப்பெரும் மக்கள் ஆதரவோடு சுயேட்சை குழு 1 இன் மூலம் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் கரைச்சி மற்றும் பச்சிளைப்பள்ளிக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக்கூறி சுயேட்சைக் குழுவாக வேட்பு மனு தாக்கலொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதவாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமை காரணமாக அவரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பாளர்கள் மற்றும் தேர்தலில் கட்சியில் அங்கத்துவம் கொடுக்காதவர்களை இணைத்து சுயேட்சை குழுவின் வேட்புமனுத்தாக்கல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழரசு கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் கிளிநொச்சியில் மூன்று சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் எதிர்வரும் நாட்களில், இத்தேர்தல் முறையில் ஒரு சிக்கல் இருப்பதால் இவ்வாறான தேர்தல் உத்தி என்பது தொழிநுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் எடுக்கப்பட்டவையே அன்றி எமக்குள் எந்தவொரு விரிசலோ பிரிவினையோ இல்லை என ஊடக அறிக்கை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.  

தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் பிளவுப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இப்படியான தொடர் பிளவுகள் தமிழரசுக் கட்சயின் வட்டார தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.