தினசரி மல்டிவைட்டமின்களை உட்கொள்வது மக்கள் நீண்ட காலம் வாழ உதவாது எனவும், ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
பரிபூரண ஆரோக்கியம், நோய் எதிர்ப்பாற்றல், கூடுதல் ஆயுள் ஆகியவற்றுக்காக மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.
ஆரோக்கிய குறைவுக்காக மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கு அப்பாலும், மருத்துவர் ஆலோசனை உடனோ அல்லது இன்றியோ சுய விருப்பத்தின் பேரிலும் தினசரி வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ள பலரும் விரும்புகின்றனர்.
ஆனால் அவற்றால் உறுப்படியான பலன் இல்லை என்பதோடு, மரண அபாயத்துக்கும் வித்திடக்கூடும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘ஜாமா நெட் ஒர்க் ஓப்பன்’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 4,00,000 ஆரோக்கியமான பெரியவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் ’நீண்ட ஆயுளை மேம்படுத்த மல்டி வைட்டமின் பயன்பாடு உதவவில்லை" என்று கண்டறியப்பட்டது.
ஆச்சரிய அதிர்ச்சியாக, நீண்ட காலம் வாழ்வதற்குப் பதிலாக, மல்டிவைட்டமின்களை எடுத்துக் கொண்டவர்கள் 4 சதவீதம் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.