தந்தைக்காக மகன் மீது வாள்வெட்டு - வாய்பேச முடியாத இளைஞன் உயிரிழப்பு


குருநாகல் - நாரம்மலை பிரதேசத்தில் வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய லசந்த பண்டார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

லசந்த பண்டாரவின் தந்தை மீது தாக்குதல் நடத்த வாள்களுடன் ஒரு குழுவினர் நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளனர்.

அதன்போது தந்தை, வீட்டின் பின்வாசலால் தப்பியோடிய நிலையில் மகன் மீது குறித்த வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய லசந்த பண்டார உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், கொலையாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.