ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைப் படைத்தாக்குதலில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட் இ பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும், 80க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            