அம்பாறை பெண்ணின் கொலையில் திடீர் திருப்பம் : அதிரடியாக கைதான இரட்டை சகோதரிகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை, மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவான காட்சிகளை சேமிக்கும் கருவி கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.