செங்கடலில் நேற்று சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலொன்று மூழ்கிய சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எகிப்தின் செங்கடல் பகுதியில், கடலோர நகரமான ஹுர்காதா (Hurghada) அருகே சிந்துபாத் (Sindbad) என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் மூழ்கியது.
இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர், இதில் நான்கு பேரின் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது.
மொத்தம் 40 சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்துள்ளனர்.
29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், மீட்கப்பட்டவர்களில் காயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எகிப்தில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட தகவலின்படி, அனைத்து பயணிகளும் ரஷ்யாவின் குடிமக்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய தூதரகம் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் ஹுர்காதா கடற்கரையின் ஒரு கிமீ தொலைவில், உள்ளூர் நேரப்படி 27 மார்ச் காலை 10:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹுர்காதா சூழல் அழகும், பவளப்பாறைகளும் மிகப்பெரிய சுற்றுலா ஈர்ப்பாக உள்ள பிரபல நகரமாகும்.
சிந்த்பாத் நீர்மூழ்கிக் கப்பல் 25 மீட்டர் ஆழத்தில் 500 மீட்டர் பரப்பளவுள்ள பவளப்பாறைகளை காண்பிக்க பயணிகள் பயன்படுத்தும் சுற்றுலா சேவையாகும்.
இது ஹுர்காதாவில் (Hurghada) நடந்த முதல் விபத்து அல்ல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
கடந்த நவம்பரில், "Sea Story" என்ற சுற்றுலா கப்பல் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 16-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அதிகாரிகள் இந்த விபத்து குறித்து மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.