பௌத்த நாடு என்ற மமதையில் அரசாங்கத்தின் உதவியோடு பௌத்த பிக்குகளும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ளும் பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, சைவ கோவில்கள், பாரம்பரியமாக மக்கள் வழிபட்டுவந்த கோவில்கள் அழிக்கப்படுவதும் அங்கு மக்கள் செல்வதை தடுப்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிங்கள பௌத்த பேரினவாதிகள், வடக்கு கிழக்கில் மத ஆதிக்கத்தை திணித்து அதன் மூலமாக ஒரு இன மேலாதிக்கத்தை திணிக்கின்ற செயற்பாட்டினை கிரமமான முறையில் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக தனி மனிதன் சிந்திக்கின்ற உரிமை மற்றும் தான் சார்ந்த மதத்தினை வழிபடுகின்ற உரிமையும், எந்த மதத்துடனும் சேர்ந்து கொள்ளுகின்ற உரிமை என்பனவு மறுக்கப்பட்டுள்ளன.
ஆகவே ஒரு நாட்டில் மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான உரிமைகள், பாதுகாக்கப்பட வேண்டும். மாறாக அதனை எந்த தரப்பினரும் நிராகரிக்க முடியாது.
அதுமட்டுமன்றி, இந்த நாட்டில், கடவுள் இல்லை என்று கூறுவதற்கு கூட அடிப்படை உரிமை கொடுக்கப்பட்டுள்ளது” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.