யாழ்ப்பாணம் திரும்பிய 74 வயது அகதியின் கைது - வெடித்தது புதிய சர்ச்சை, அரசாங்கம் விளக்கம்



சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தான் தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்று நாடு திரும்பிய 74 வயதான சின்னையா சிவலோகநாதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தமிழ்மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த கைது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிலிட்டுள்ள பிமல் ரத்நாயக்க
 சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புபட்டவர்கள் இது குறித்து செயல்பட்டிருந்தால் யுத்தத்தின் பின்னர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம். அமைச்சர் ஆனந்த விஜேபால உடன் கதைத்தேன்.

அவர் இந்த சட்டத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் கொள்கையில்லை. நாட்டின் பழைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நானும் அமைச்சர் சந்திரசேகரும் 2007, 2008 இல் அந்த அகதி முகாம்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதேநேரம் தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல்,சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடுசென்ற தமிழர்களை திரும்பி வாங்கோ, வாங்கோ என நீங்கள் தானே வெற்றிலைபாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை
நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமானநிலையத்தில் கைது செய்வதா? என  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அரரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.