வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையருக்கு வெளியான அறிவிப்பு

 வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் பதிவாளர் நாயகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

இவ்வாறு திருமணம் செய்யும் இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவை இல்லாவிடின் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணத்துக்கு விண்ணப்பிக்கும் நபர், எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் தொற்று நோயால் பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் 1,703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் அனுமதியுடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.