மனித உரிமைகள் மீறப்பட்டதால்தான் ஆயுதம் ஏந்தும் நிலை உருவானது…

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தமக்கான அனைத்து உரிமைகளுடனும் பிறக்கின்றனர். ஆனால் நாம் வாழத் தொடங்குகிறபோதுதான் நமது உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பதை கண்டடைகிறோம்.

மனித உரிமைகள் குறித்துப் பேசினாலோ, மனித உரிமைகள் தனம் வந்தாலோ பெரும் பதற்றம் அடைகின்ற நாடாக சிறிலங்கா தன்னை அடையாளப்படுத்தி வருகிறது.

தமிழ் ஈழ மக்களை அடக்கி ஒடுக்கி இனவழிப்பு செய்வதுதான் வீரம் என்று கருதி மனித உரிமைகளை நசுக்கி வருகிற நாடு இது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே மனித உரிமைகளுக்கானது என்பதையும் நாம் அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டிய தருணமிது.

டிசம்பர் 10ஆம் நாளன்று, அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் காணாமல் ஆக்கப்படுதலுக்கு நீதி கோரியும், இறுதிப் போரில் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதியை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது இனப்படுகொலையில் ஈபட்ட அரசுக்கு எதிராக மக்கள் தமது விரக்தியும் கோபமும் கொண்ட உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர். மனித உரிமைகள் தினமன்று, தமிழர்களின் தேசத்தில் கண்ணீரும் வேதனையும் கொண்ட போராட்டம் நடைபெற்றிருப்பது உலகிற்கான ஓரு செய்தியாகும்.

சரணடைந்த என் பிள்ளை எங்கே? கையளிக்கப்பட்ட என் மகன் எங்கே? என்று தாய்மார்கள் எழுப்பிய கேள்விகள் தமிழர் தேசத்தில் இருந்து இந்த உலகம் நோக்கி நீண்டொலித்தன.

தமிழர்களின் தேசத்தில் மனித உரிமைகளை வேண்டிய நடந்த இந்தப் போராட்டமே, இலங்கையில் மனித உரிமைகளின் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதையும் கடந்த காலத்தில் மனித உரிமைகள் எப்படி நசுக்கப்பட்டன என்பதையும் சொல்லிச் செல்கிறது.

ஈழத் தமிழ் மக்களின் குருதியால் நனைந்த ஈழ நிலத்தில் எங்கள் உரிமைகளும் உயிர்களும் நசுக்கிப் புதைக்கப்பட்டன. உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை நசுக்க, மனித உரிமைகளை குழிதோண்டிப் புதைத்த நாடு என இலங்கை அடையாளமாகிறது.

ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே அடிப்படை உரிமையாகும். ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம்.

அப்படிப் பார்க்கையில், நாம் நமக்கான வாழ்வைத்தான் வாழ்கிறோமா? இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில், சிங்களப் பேரினவாத அரசின் கீழ் நாம் ஒடுங்கியும் அடங்கியும் வாழ வேண்டும் என ஆள்பவர்கள் நினைக்கின்றனர்.

இதுதான் யதார்த்தமான நிலை. நாம் பிறந்த மண்ணில் நமது உரிமைகளுடன் வாழ முடியவில்லை. எமது உரிமைகளுடன் எம்மை வாழவிடாமல் தடுப்பதுவே இங்கே நிகழ்கிறது.

மனிதர்களும் எல்லோரும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்பதையே ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் மனித உரிமைப் பிரகடனம் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.

ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு வழங்கப்பட்ட நீதியைப் பற்றி இன்றைய நாளில் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

மனிதர்களின் வெவ்வேறு விதமான உரிமைகளும் அடையாளங்களும் வலியுறுத்தப்படுகின்ற, அங்கீகரிக்கப்படுகின்ற காலத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எம்முடைய நிலத்தில் வாழ முடியாது.

நம்முடைய அடையாளங்களுடன் நாம் வாழ முடியாது. நாம் நாமாக வாழ முடியாது. நம்முடைய வரலாற்றைப் படிக்க முடியாது. நம்முடைய வரலாற்றை பேச முடியாது. இழந்த உரிமைகளைப் பற்றி பேசவும் அதனைக் கோரவும் முடியாது.

உலகமயமாதல் சூழலில் உலகின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற, அல்லது தட்டிக் கேட்கக்கூடிய காலம் ஒன்றிலேயே நாம் பலவந்தமாக இனவழிப்புக்குள் அமிழ்த்தப்படுகிறோம்.

ஈழத் தமிழ் நிலத்தில் எமக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன என்பதை சிந்தித்துப் பார்க்கிற போது வெறுமைதான் எஞ்சுகிறது. மிக நுணுக்கமான முறையில் எங்கள் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

இலங்கையில் மனித உரிமை மீறல்களின் ஆரம்ப நிலையோ மிகவும் கொடூரமானது. உண்மையில் அதன் அடிப்படையே இன மேலாதிக்கம்தான். சக மனிதர்கள்மீதான ஒடுக்குமுறை பாரிய குற்றமாக உலகில் கருதப்படுகின்றது.

மனிதர்களுக்கிடையிலான சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை, சிறுவர்கள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மீறல்கள் குறித்தெல்லாம் உலகில் நன்றாகப் பேசப்படுகின்றது.

மனித உரிமை அவைகளை நடாத்துவதற்கும் வருடாந்தம் அவைகள் பற்றி உரையாற்றுவதற்கும் உலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்வதற்குமான தேவைகளும் உள்ளடங்களுங்களும் உலகில் தொடர்ந்தும் வாய்த்து வருகின்றன.

ஆனால் மெய்யாகவே அந்த மீறல்களை தடுக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உலகில் உள்ள நாடுகளின் அரசுகள்மீது பணிப்பதற்குத்தான் இயலாமல் இருக்கின்றன.

இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் இன்னொரு பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றது. இது இன உரிமை மீறல். இது இன உரிமை மறுப்பு. ஆனால் இதனை ஒரு மனித உரிமை மீறல் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே 30 ஆண்டுகள் இந்த உலகிற்கு தேவைப்பட்டுள்ளன என்றால் இந்த உலகம் எவ்வளவு ஆபத்தமானது?

பல இலட்சம் மக்களின் உயிர்களை காவு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டது என்பது எவ்வளவு கொடூரமான விசயம்.

ஒரு கொடும்போரின் இறுதி நாட்களில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டதே? ஈழத்தில் மாத்திரமல்ல, ருவாண்டா இனப்படுகொலை, குர்து இனப்படுகொலை, ஆர்மோனியன் இனப்படுகொலை என்று உலகில் நிகழ்ந்தேறிய எல்லா இனப்படுகொலைகளின் போதும் மனித உரிமை என்ற வார்த்தைகள் சாதாரணமாககூட உபயோகிக்கப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்படவில்லை.

அதனை மனித உரிமை மீறல்களாக ஏற்றுக்கொள்ளவும், இனப்படுகொலைகளாக ஏற்றுக்கொள்ளவும் வெகுகாலம் எடுத்தது.

இந்த மக்களின் இனப்படுகொலைக் கல்லறைகள்மீது வெள்ளையும் அடிக்கப்பட்டது. உலகின் அரசியல் தேவைகளின் பிரகாரங்களின்படியே தீர்ப்புக்கள் காலம் தாழ்ந்து கிடைத்தன.

இலங்கைத் தீவில் தொடரும் இன உரிமையும் இப்படி ஒரு கணக்கிலேயே தொடர்கின்றது. ஒரு சிறு இனத்தின் பல்லாயிரம் போராளிகள் ஆயுதம் ஏந்தி மாண்டுபோனதின் அரசியல் நியாயத்தின் உண்மையை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல.

உலகெங்கும் அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

தன்னுடைய மொழியை, தன்னுடைய நிலத்தை, தன்னுடைய அடையாளத்தை, தன் சக மனிதர்களை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிற நிலமை வருகின்றது எனில் அங்கு மனித உரிமை மீறல் என்பது எந்தளவுக்கு முற்றிப் போன பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதை வல்லுனர்கள் அறியாதவர்களல்ல.

இத்தகைய தினங்களை பிரகடனப்படுத்திய அமைப்புக்களின் கணக்குகளில் ஏன் இவை உள்ளடங்கவில்லை? ஈழத்தில் மிகக் கொடிய இனப்படுகொலை நடைபெற்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

போரில் படு பயங்கரமாக ஒரு இன அழிப்பின் அத்தனை நோக்குகளுடனும் கொல்லப்பட்ட மக்கள் குறித்து எந்த நீதியும் இல்லை. மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்கவும் அந்த மக்களுக்காக ஒரு விளக்கினை ஏற்றவும், அவர்களுக்காக அழவும்கூட இங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இதனைக்கூட இந்த உலகும், இத்தினங்களும் இதுசார் அமைப்புக்களும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் ஈழ இனப்படுகொலை குற்றங்களிலிருந்து தப்பிக் கொள்ளும் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அதிகாரபூர்வமாக ஏற்கப்படாத நிலையில் கள்ள மௌனத்துடன் இணங்கப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதரின் உரிமை குறித்துப் பேசும் சாசனங்கள், ஒரு இனத்தின் பகுதியினரே இல்லாமல் போயிருப்பதை குறித்து பேசாமல் இருப்பது ஏன்? அவர்கள் மிகவும் கொடூரமான வழிகளில் கொல்லப்பட்டமை குறித்தும் காணாமல் ஆக்கபட்டமை குறித்தும் அவர்களின் வாழ் நிலங்கள் பறிக்கப்பட்டமை குறித்தும் பேசாதிருப்பது ஏன்? உலகின் இந்த வஞ்சகங்களிற்கும் இலங்கையில் காணப்படும் இனப் பாரபட்சங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடும் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை போன்றவை இந்த உரிமை மீறல்களை ஊக்குவிக்கின்றன. இத்தனை உலகப் பேரழிவுகளின் பின்னரும் தரவுகளை மதிப்படும் ஒரு சபையாக, ஈற்றில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா தேவை தானா? ஈழத் தமிழ் மக்களும் மனிதர்கள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, உலகில் ஒடுக்கப்படும் எல்லா மக்களையும் மனிதர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் மனித உரிமை மீறல்களில் அரசியல் இலாபம் தேடுவதும் ஆதாயம் தேடுவதும் பூகோள நலன்களை பெறுவதிலும் இந்த உலகம் ஈடுபாடு காட்டும் என்றால் ஈழத்தில் நடந்ததுபோன்ற இனப்படுகொலைகளை உலகில் வேறு இடங்களிலும் நாம் சந்திக்க நேரிடும்.