தமிழர் பகுதியில் உள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும்: சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் சடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (01.07.2023) அவர் வெளியிட்ட ஊடகங்களுக்கு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது அதற்கான தடையங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

ஆனால் அவையாவும் உரிய நீதி இன்றி மறைக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் மன்னாரில் இரண்டு பாரிய புதைகுழிகளில் தோண்டத் தோண்ட எலுப்புக் கூடுகள் வந்தன.

ஒன்று திருக்கேதீஸ்வர வீதியில் நீர்க்குழாய் அமைப்பதற்கான அகழ்வில் அப்பகுதிக்கு அருகில் யுத்தகாலத்தில் இராணுவம் இருந்து முகாமிக்கு அருகில் உரிய ஆய்வுகள் இல்லாமல் மறைக்கப்பட்டது.

இரண்டாவது சதொச கட்டட அமைப்பதற்கான அகழ்வில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன. அவற்றை ஆங்கிலேயர் காலத்தவை என கதை முடித்தனர்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள அரசாங்கத்தால் வழங்கப்படமாட்டாது.

எனவே தமிழர் தாயகத்தில் குறிப்பாக இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பௌத்த சிங்கள அரசாங்கத்தால் நீதி கிடைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை.

அவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை மூலமே சாத்தியப்படும்.

இதனால் தாயக புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக மூன்றாம் தரப்பு மேற்பார்வையை உள்ளீர்க்க வலுவான இராஐதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து கையாள வேண்டும்.

அதுவே புதைகுழி விவகாரம் மட்டுமல்ல அரசியல் தீர்வுக்கும் வழியைத் திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.