சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் - சவால் விடும் செல்வம் எம்.பி


சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களில் பல கருத்துக்களை கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

மாகாணசபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில் எங்களது மக்களது பிரச்சனை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. தங்களது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மக்கள் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டுக் காட்டும் வழியிலும் தான் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள். அந்தவகையில் தங்களது தேசத்து மக்களது பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

இவர் யார்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாம் செய்து போட்டு வந்து கொக்கரிக்க கூடாது.

எனவே அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.